மதுரை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேர் உட்பட 7 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அனைவரும் இரவோடு இரவாக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த வாரம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், தொடர்புடையவர்களை மதுரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இவர்களில் 7 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பதுங்கி இருப்பதாக மதுரை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த மாவட்ட போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். சென்னை போலீஸார் உதவியோடு திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகளில் ஒவ்வொன்றாக சோதனை நடத்தினர். அப்போது, மதுரை மாட்டுத்தாவணி மோதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த 7 பேர் விடுதி ஒன்றில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை இரவோடு இரவாக மதுரை அழைத்துச் சென்றனர். இவர்களில் 2 பேர் மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.