Police Department News

மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர்.

மாணவியின் கனவை நிறைவேற்றிய காவலர்.

சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, ‘நீட்’ தேர்வு எழுத சென்றார்.

ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், ‘ஆன்லைன்’ வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்ததால், வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரமின்றி, என்ன செய்வது என்று தெரியாமல் மவுனிகாவும், அவரது தாய் ஷீலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.அதைக்கண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை, 24, உதவிக்கு அனுப்பினார். அவர், தாய் ஷீலாவை, பைக்கில் ஏற்றிக் கொண்டு, புரசைவாக்கம் நோக்கி சென்றார்.

மாணவியின் தாயை, அவரது வீட்டில் இறக்கி விட்டு, ஒரிஜினல் ஆதார் அட்டையை பெற்றுக்கொண்டு, தேர்வு மையம் நோக்கி, மகேஷ்வரன் திரும்பினார்.மதியம், 2:00 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில், 1:30 மணிக்கு ஆதார் அட்டையை மாணவியிடம் ஒப்படைத்தார்.

மருத்துவ கனவு

உற்சாகமாக தேர்வு எழுதிய மாணவி மவுனிகாவை, மகேஷ்வரன் தன் பைக்கில் அழைத்து சென்று, வீட்டில் இறக்கி விட்டார்.’மாணவியின் மருத்துவ கனவிற்கு, என்னால் முடிந்த உதவியை செய்தேன்’ என, காவலர் மகேஷ்வரன் கூறினார். மனிதாபிமானத்துடன் உதவிய அவரது செயலுக்கு பாராட்டு குவிகிறது.

Leave a Reply

Your email address will not be published.