Police Department News

வியாசர்பாடியில் சேதமடைந்த காவல் நிலையம் சிரமப்படும் காவல்துறையினர்

சென்னை: சென்னை வியாசர்பாடி காவல் நிலையம், அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த காவல் குடியிருப்பில் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் வளர்ந்து நிற்கும் செடி, கொடிகள், பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் அங்கு குவிந்து கிடக்கும் பழுதடைந்த வாகனங்கள் ஆகியவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தம் 15 வீடுகள் கொண்ட இந்த காவல் குடியிருப்பு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அதே பகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 3 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் வியாசர்பாடி சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் இயங்கி வந்தது.

நாளடைவில் இந்த காவல் நிலைய கட்டிடம் மற்றும் காவல் குடியிருப்புகள் சேதமடைந்து வந்தன.

இதனால் காவல் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு பயந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இதனால் குடியிருப்புகள் காலியாக கிடந்தன.

ஆனால் அதைவிட காவல் நிலைய கட்டிடம் அதிகளவில் சேதமடைந்து இருந்ததால் காவல் நிலையத்தை தற்காலிகமாக அந்த காவல் குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் மாற்றினர். அதன்படியே காவல் குடியிருப்பின் ‘ஏ’ பிளாக் பகுதியில் தற்போது வியாசர்பாடி குற்றப்பிரிவு, வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் போக்குவரத்து காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

அந்த காவல் குடியிருப்பில் உள்ள முன்னாள் உதவி-ஆய்வாளர் வீட்டில்தான் தற்போது வியாசர்பாடி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

எந்த காவல் நிலையத்திலும் இல்லாத அளவுக்கு இந்த காவல் நிலைய வளாகத்தில் காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மலைபோல் குவிக்கப்பட்டு கிடக்கின்றன.

காவல் குடியிருப்பின் ‘பி’ பிளாக் மற்றும் பழைய காவல் நிலையம் கட்டிடங்கள் மீதும், அதை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுவதால், அந்த கட்டிடம் ஒருவித பயங்கரமான தோற்றத்துடன் காட்சி அளிக் கிறது.

இவை காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை முகம் சுளிக்க வைப்பதோடு, ஒருவித அச்சத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் இருப்பதால் காவல்துறையினரால் அங்கு தங்கி ஓய்வெடுக்க முடியாத நிலை இருக்கின்றது. மேலும் இங்கிருக்கும் காவல்துறையினருக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண் காவல்துறையினர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

எனவே இந்த காவல் நிலையத்துக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிதாக சொந்த கட்டிடம் கட்டவேண்டும். அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.