நான்கு நாட்களுக்கு முன்னர் ஐஸ் ஹவுஸில் நடந்த கொலை சம்பந்தமாக குற்றவாளி பிடிபட்டார். தம்பியை கொலை செய்ய நடந்த முயற்சியில் அண்ணன் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
சென்னை திருவெல்லிகேணி கஜபதி தெருவைச் சேர்ந்தவர் முனியன்(24). ஆட்டோ ஓட்டுநர். சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 13-ம் தேதி மாலை 3 மணி அளவில் முனியன் ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலை வழியாக ராம் நகரில் 8-வது தெரு பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்த போது அடையாளம் தெரியாத இருவர் மடக்கி தெருவிற்குள் முனியனை ஓட ஓட கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஐஸ் ஹவுஸ் போலீஸார் முனியன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சத்யா என்ற பாம்பே சத்யா(28) என்பவர் தான் கூட்டாளியுடன் சேர்ந்து குத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
சத்யா மீது ஏற்கெனவே ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சத்யாவிற்கும், கொலை செய்யப்பட்ட முனியனின் சகோதரர் அருணுக்கும் முன் விரோதம் இருந்துள்ளதாகவும், அதனால் முனியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சத்யாவை ஐஸ்அவுஸ் போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.