ஈரோடு: பவானி அருகே உள்ள பெருமாள்கரடை சேர்ந்தவர் திலகன் (52). இவர் சத்தியமங்கலம் அருகே கெஞ்சனூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து வேலை விஷயமாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக கொண்டையம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள காந்திநகருக்கு செங்கல் பாரம் ஏற்றிவந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் திலகன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திலகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த திலகனுக்கு சரோஜா (50) என்ற மனைவியும், வசந்தராஜ் (27) என்ற மகனும், கலைமணி (32), பொன்னரசி (29), ஞானரோஜா (28) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் கலைமணி கோவையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
விபத்தில் பலியான உதவி-ஆய்வாளர் திலகன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட காவல்Dr.R.கண்காணிப்பாளர் சிவக்குமார் திலகனின் வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.