சென்னை ஆற்காடு சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சபிலால் சந்த் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கட் கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை கேஸ்வெல்டிங் வைத்து துளையிட்ட கொள்ளையர்கள், லாக்கர்களையும் வெல்டிங் வைத்து உடைத்தனர். கேஸ் தீர்ந்து விட்டதால் இரு லாக்கர்களை மட்டும் உடைத்து அதிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.
வங்கியின் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால் சந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையை அரங்கேற்றியிருப்பதை கண்டறிந்த போலீஸார், கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படைகளை அமைத்தனர்.
பெங்களூரு மற்றும் நேபாளத்திற்கு தனிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் நேபாளத்திற்கு சென்ற தனிப்படையினர், குற்றவாளிகளை கைது செய்வதற்காக இண்டர்போல் உதவியை நாடினர். நேபாளத்தில் உள்ள உள்ளூர் குற்றவாளிகளின் பட்டியலை ஆராய்ந்த போது சபிலால் சந்த்தின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தன.
இதனையடுத்து சபிலால் சந்தை இண்டர்போல் காவல்துறையினர் கைது செய்தனர். சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி சபிலால் தமிழகம் அழைத்து வரப்படுவான் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.