
தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ’உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.09.2021) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை, அனைத்து காவல் நிலையங்கள், சிறப்பு பிரிவுகள் போன்ற அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி வரும் அனைத்து காவல் ஆளினர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வரை மொத்தம் 113 பேர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனு கொடுத்தவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலமாக பதில் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த காவலர் குறை தீர்ப்பு முகாமில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, திரு. சங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
