Police Recruitment

பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார்

பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடினர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அதே நாளில் பண்ருட்டி பகுதியில் மேலும், 2 இடங்களில் கொள்ளை நடந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனித்தனியே தனிப்படைகளை அமைத்தார்.

அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரையூர் கிராமத்தில் கொள்ளையடித்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நெம்பர்கள், அந்த செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துவிட்டு புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்துகின்றனரா, காணாமல் போன கார் எந்தெந்த டோல்கேட்டை கடந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த நேரத்தில் திருட்டு போன கார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு செல்லும் வழியில், உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை சாலையில் கார் செல்வதாக போலீசாருக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் திருட்டில் ஈடுபட்டவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தனர். அவர்கள் சிம் கார்டை மாற்றியதை கண்டறிந்து, புதிய நெம்பரின் டவர் எங்குள்ளது என்பதை கண்டறிந்தனர்.உடனடியாக திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு சென்றபோது, திருடு போன காரின் பதிவு எண்ணை திருடர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட கொள்ளையர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டிய போலீசார் கிரிவல பாதையில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்ல முயன்ற போது அவர்களின் காரை முந்தி போலீஸ் ஜிப்பை நிறுத்தி சுற்றி வளைத்தனர்.

காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த பாலாஜி (வயது 26), யுவராஜ் (22) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இவர்களு டன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு வைத்துள்ளனர். வேறு எங்கெங்கு கொள்ளை யடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கொள்ளையர்கள் சென்ற காரை போலீசாரின் ஜிப் பின் தொடர்ந்து சென்று அவர்களை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.