Police Department News

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

அந்த பெண் ரயில்களில் சோதனைகள் செய்வது, விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறை உடையில் உலா வந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார்.

நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்தவர் ஜடலா மாளவிகா. சிறுவயதில் இருந்தே எஸ்.ஐ. ஆக வேண்டும் என்பது மாளவிகாவின் கனவு. மாளவிகாவை போலீஸ் அதிகாரியாக பார்க்க அவரது பெற்றோரும் விரும்பினர்.

மாளவிகா நிஜாம் கல்லூரியில் வேதியியலில் எம்.எஸ்சி முடித்துள்ளார். 2018-ல், ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தார்.

இருப்பினும், கிட்டப்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதி தேர்வில் அவர் தகுதி பெற முடியவில்லை. எனவே, அவர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெறவில்லை.

ஆனால், அவர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், விரைவில் வேலை கிடைக்கும் என்றும் உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் நம்பினர்.

“உடல் தகுதித் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். எனவே, தகுதித் தேர்வுக்கு தகுதி பெறவில்லை. கடந்த ஆண்டு தனக்கு வேலை கிடைத்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பக் காரணங்களால் சம்பளம் வரவில்லை, விரைவில் சம்பளம் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்” என்று ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.பி. ஷேக் சலிமா பிபிசியிடம் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக மாளவிகா போலி எஸ்.ஐ-யாக வலம் வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.ஐ.யின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் போலீஸ் உடையில் என்ன இருக்கும் என்பது குறித்து அவர் அறிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் தான் அவருடைய சீருடை தைக்கப்பட்டது. ரயில்வே காவல்துறையின் லச்சினை, நட்சத்திரக் குறியீடுகள், தோள்பட்டை பேட்ஜ், பெல்ட் மற்றும் ஷூக்கள் செகந்திராபாத்தில் வாங்கப்பட்டன. அதன்பிறகு, விசாகா பிரிவில் தான் பணிபுரிவது போன்று போலி அடையாள அட்டையையும் உருவாக்கியுள்ளார்’’ என போலீசார் தெரிவித்தனர்.

ஒரு வருடமாக நல்கொண்டா-செகந்திராபாத் வழித்தடத்தில் போலி எஸ்.ஐ.யாக அவர் ஏமாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்தாலும், அவர் 2019 ஜனவரி 3-ம் தேதியே போலி அடையாள அட்டையை உருவாக்கியுள்ளார். அட்டையில் ஜே. மாளவிகா, சப்-இன்ஸ்பெக்டர் என எழுதப்பட்டுள்ளது. MR5732019 என்ற பிரத்யேக எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய ரத்தப்பிரிவும் முகவரியும் பின்புறம் எழுதப்பட்டிருக்கும்.

மார்ச் 8 அன்று நல்கொண்டாவில் அமைப்பு ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின கொண்டாட்டத்திலும் மாளவிகா போலீஸ் உடை அணிந்து பங்கேற்றார். அந்த அமைப்பினர் அவரை கௌரவித்தனர்.

”எதையோ ஒன்றை சாதிக்கத்தான் பெண்கள் வெளியே செல்கின்றனர். என் மனைவி இதை சாதிப்பாள்.. என் குழந்தை இதை சாதிக்கும் என்று நம்பி வெளியே அனுப்புங்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.. சமூகத்தில் அவர்கள் வளரட்டும்..” என அந்நிகழ்வில் பேசியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.