வாகன சோதனையில் எஸ்.ஐ.,க்கள் மீது தாக்குதல்…
ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ.,க்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி அருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. எஸ்.ஐ.க்கள்., ஜெயபாண்டியன், நந்தக்குமார் இரவு 10:00 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று பேர் ஒரு டூவீலரில் வந்தனர். அவர்களிடம் எஸ்.ஐ., ஜெயபாண்டியன், நந்தக்குமார் விசாரித்தனர். மூவரும் மது போதையில் முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் அவர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.விசாரிக்கும் போதே அதில் ஒருவர் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு அங்கு கிடந்த தென்னை மட்டையால் எஸ்.ஐ.,க்களை தாக்கினார்.
மற்ற இருவரும் போலீசாரின் டூவீலரை தள்ளிவிட்டு ஹெல்மட், கற்களால் தாக்கி விட்டு டூவீலரில் தப்பினர்.இந்த காட்சிகள் அருகில் உள்ள பேக்கரி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. காயம் அடைந்த இரண்டு எஸ்.ஐ.,க்களும்., ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி., வருண்குமார் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.இதுகுறித்து எஸ்.பி., கூறுகையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். அவர்கள் பழைய குற்றவாளிகளா என்றும் விசாரிக்கிறோம், என்றார்.ஒருவர் கைதுஎஸ்.ஐ.,க்களை தாக்கியதாக, உச்சிப்புளி சின்ன நாகாச்சி வெள்ளமாசி வலசையை சேர்ந்த சுப்பிரமணி மகன் கணேசன் 25, என்பவரை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.