திரும்பி வந்து சொல்கிறோம்'- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் கடையில் உள்ள நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றதுபோல சேலம் திவ்யம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமாக சேலம் மாநகரில் மூன்று நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் டு ஓமலூர் மெயின் ரோட்டில் குரங்குசாவடி பகுதியில் திவ்யம் ஜூவல்லர்ஸ் கடையும் நகைக்கடை வளாகத்தில் சீனிவாசனின் மூன்றாவது மகன் ஶ்ரீ பாஷ்சியத்தின் வீடும் உள்ளது.நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள மதில் சுவரைத் தாண்டி வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் வைத்திருந்த லாக்கரில் தங்க நகைகள், வைரங்கள், பிளாட்டினம், ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரிந்ததையடுத்து காலையில் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.அதன்படி, மாநகர காவல் துறை ஆணையாளர் செந்தில்குமார், இணை ஆணையாளர்கள் தங்கதுரை, செந்தில் மற்றும் உதவி ஆணையாளர்கள் என ஒரு டீமே வந்து ஆய்வு நடத்தினர். அவர்கள் செல்லும்போது பத்திரிகையாளர்கள் கொள்ளை குறித்து கேள்வி கேட்டபோது,
திரும்பி வந்து சொல்கிறோம்’ என்று கூறிவிட்டுச் சென்றனர். அதனால் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரியவில்லை.முதற்கட்ட தகவலின்படி 2 முதல் 4 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட திவ்யம் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வீட்டில் மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்