
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீர வணக்க நாள்
1959ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற் கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல் வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் தென்காசி மாவட்டத்திற்கென புதிதாக காவலர் நீத்தார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS., அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் காவல் ஆளிநர்கள் என அனைவரும் மலர் வளையம் வைத்து 60 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக பணியின் போது இன்னூயிர் நீத்த துணை காவல் கண்காணிப்பாளர், தெய்வத்திரு. சுவாமிநாதன் அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. வெற்றிவேல் அவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களை கெளரவப்படுத்தி ஆறுதல் கூறினார்.
