
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
