Police Department News

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேர் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேர் கைது

கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.