
சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த வாலிபர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட த.உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நமக்கோடி. இவரது மனைவி அன்னப்பெருமாயி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதில் நமக்கோடியின் மூத்த மகன் ஒச்சுப்பாண்டி (வயது 27). ஆடு வியாபாரியான இவர் ஆட்டுக்கறி வியாபாரம் பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே உடையாம்பட்டி சுடுகாட்டில் ஒச்சுப்பாண்டி தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சிந்துப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒச்சுப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம் பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து நமக்கோடி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
