
சட்டம், மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன் நான். நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்காக கூடியவுடன், ஆஜரான வழக்குரைஞா் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா முறையீடு ஒன்றை முன்வைத்தாா்.
அதாவது, ‘உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பெயா்களை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் கொலீஜியம் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மூத்த வழக்குரைஞா் என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘ஒரு வழக்குரைஞராக உங்கள் மனம் விரும்புவதைக் கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. அதே நேரம், தலைமை நீதிபதியாக, சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன் நான். நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதியாகக் கூற முடியாது’ என்றாா்.
முன்னதாக, மூத்த வழக்குரைஞா் என்ற பதவியை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞா் மேத்யூஸ் நெடும்பரா உள்பட 8 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த அக்டோபரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமா்வு, ‘இந்த மனு தவறான முன்னுதாரணமாக உள்ளது. மூத்த வழக்குரைஞா் பதவி என்பது வழக்குரைஞரின் அனுபவம் மற்றும் தகுதிக்கு நீதிமன்றம் கொடுக்கும் அங்கீகாரமாகும்’ என்று குறிப்பிட்டது.
