Police Department News

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை திடீர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். விவசாயி. இவரது மனைவி சத்யா (வயது30). இவர் செய்யூர் சிப்காட்டில் உள்ள தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாக மானாமதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

அவருக்கு டாக்டர் லத்திகா மற்றும் நர்சுகள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று இரவு 11:30 மணியளவில் சத்யாவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக சத்யாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் இன்று காலை திரண்டனர். அவர்கள் சத்யாவுக்கு தவறான சிகிச்சை
அளிக்கப்பட்டதால் தாயும் குழந்தையும் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.

ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்யா மற்றும் அவரது குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.