
டீப் பேக் போலி ஆபாச வீடியோவை தயாரித்து வெளியிட்டவர் கைது
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் என்னும் போலி ஆபாச வீடியோவை உருவாக்கி பரப்பி விட்ட நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் வீடியோவில் வேறொரு நபரின் முகத்தை அசல் போன்றே பொருத்துவதை டீப் பேக் என்கின்றனர்.
இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து கடந்த ஆண்டு வீடியோ வெளியானது
இதன் வாயிலாக டீப் பேக் தொழில் நுட்பத்தின் ஆபத்தை உணர்ந்த மத்திய அரசு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கையெடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து டில்லி போலீசின் நுண்ணறிவுப் பிரிவினர் நான்கு பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்து விசாரித்து வந்தனர்.
டீப் பேக் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட இணைய முகவரியின் அமைவிடம் பற்றிய தகவல்களை சமூகவளைதள நிறுவனமான மெட்டாவிடம் பெற்றனர்.
அதன் அடிப்படையில் டீப் பேக் வீடியோ உருவாக்கிய நபரை டில்லி போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்
தென்மாநிலத்தை சேர்ந்த அவரை விசாரணைக்காக டில்லி அழைத்து சென்றனர்.
அவரது மொபைல் போன் லேப்டாப் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர் பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிடப்படவில்லை.
