
சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் பழனிக்குமார், பல்வேறு முக்கிய வழக்குகளை திறமையாக கையாள்ந்து, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கினார். தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.
இத்தகைய சிறப்பான சேவையை பாராட்டும் வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் பழனிக்குமாரை நேரில் அழைத்து சந்தித்து, அவரை பாராட்டி, பண வெகுமதி வழங்கி சிறப்பித்தார். மேலும், அவரது பணிசாதனைக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, காவல் துறையில் கடமையை உணர்வோடு ஆற்றும் அதிகாரிகளுக்கான சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. இதன் மூலம் காவல் துறையின் மீது பொதுமக்கள் கொள்ளும் நம்பிக்கை மேலும் வலுப்பெறும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, சார்பு ஆய்வாளர் பழனிக்குமாரை பாராட்டி, அவரது தொடர்ந்து சிறப்பான சேவை விரிவடைய வாழ்த்தினர்.
