Police Department News

வாகனச் சோதனையில் பிடித்த காவலருக்கு அறைவிட்ட இளைஞர் கைது

ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று காலை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வேகமாக வந்த அவர்களை குமரன் நகர் போலீஸ் மகேஸ்வரன் பிள்ளை என்பவர் தடுத்தார். அவரை தட்டிவிட்டுச் சென்றவர்களை மகேஷ்வரன் மடக்கிப் பிடித்தார். வண்டியின் சாவியை எடுத்தார், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தை  ஓட்டி வந்த மணிகண்டன் என்ற இளைஞர் காவல்ர் மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பொதுவெளியில் அவரை தரக்குறைவாக பேசி, ”மோட்டார் பைக்கைப்  பிடிக்க உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ என்ன டிராபிக் போலீஸா” என்று கேட்டு அவரது சட்டையைப் பிடித்து எதிர்பாராத நேரத்தில் பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

கன்னத்தில் விழுந்த அறையால் நிலைகுலைந்து கீழே விழப்போன மகேஷவரன் சுதாரித்துக்கொண்டு நின்றார். போலீஸைத் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் தடுத்து விலக்கிவிட்டனர்.

ஆனாலும், ”உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ டிராபிக் போலீஸா, என்னை என்ன செய்வாய், மிஞ்சிப் போனால் பெட்டி கேஸ் போடுவாய் அவ்வளவுதானே”  என்று தாக்கமுயன்றார். அவரை நண்பர்கள் மடக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் மகேஷ்வரன் அவரை விடுவதாக இல்லை அவர் பின்னாலேயே சென்றார். அப்போது ”பின்னலேயே வந்தால் மீண்டும் நாலு உதை வாங்கப் போகிறாய்”என்று மணிகண்டன் மிரட்டினார்.

பொதுவெளியில் காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூட்டத்தில் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காவல்பணியில் இருந்த போலீஸை பொதுவெளியில் தாக்கி தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

வேளச்சேரி தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (21) மடிப்பாக்கம்  ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர். இவர் மீது 294 (b), 352, 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.