Police Department News

கம்பம் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவருக்கு வலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு

கம்பம் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவருக்கு வலை- அழுகிய நிலையில் உடல் மீட்பு

தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ் (வயது 32). விவசாயி. இவரது மனைவி அனுமோல் (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 18-ந் தேதி பள்ளியில் இருந்து வந்தவர் மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பிறகு பிஜேசும் மாயமானார். இந்நிலையில் பாம்பனார் பகுதியில் வசித்து வந்த அனுமோலின் தந்தை ஜான் தனது மகளுக்கு போன் செய்தார். போன் ரிங் ஆகி பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜான் மற்றும் அவரது மனைவி பிலோமினா ஆகியோர் தங்களது மகளை பார்க்க வீட்டுக்கு வந்தனர். வீட்டின் படுக்கை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வெளியே சென்று பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் போர்வை சுற்றப்பட்ட நிலையில் அனுமோல் உடல் கிடந்தது.

இது குறித்து அவர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமோலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், அனுமோல் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருப்பதால் காயங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணத்தால் தனது மனைவியை கொலை செய்து விட்டு பிஜேஸ் தப்பி ஓடி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால் அவரை தேடி வருகிறோம்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையான முடிவுகள் தெரியவரும். கொலை செய்த தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கடத்துவதற்காக அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றனர். தற்போது குழந்தையுடன் மாயமான பிஜேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.