
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள மந்திரிகவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் முதலாவது மனைவியின் மகன் சென்ராயன். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2-வது மனைவியின் மகன் அய்யப்பன் (வயது 35). விவசாயியான இவர் தனது தந்தை ராஜாவுடன் வசித்து வந்தார். சென்ராயன், அய்யப்பன் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன், விவசாய தோட்டத்துக்கு செல்வதாக ராஜாவிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று ராஜா தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்றார். அங்கு மோட்டாரை இயக்கிவிட்டு, கிணற்றை எட்டிப்பார்த்தார். அப்போது கிணற்று தண்ணீரில் அய்யப்பன் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா, மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு மற்றும் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் பிணமாக மிதந்த அய்யப்பன் உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அய்யப்பனின் தந்தை ராஜா, காவல்துறையினரிடம் பரபரப்பு புகார் அளித்தார். அதில் தங்களுக்கும், சென்ராயன் குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்கள் அய்யப்பனை அடித்துக்கொலை செய்து, கிணற்றில் வீசி உள்ளனர் என தெரிவித்திருந்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அய்யப்பன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
